Posts Tagged ‘கல்லூரி’
என்னை காப்பாற்றிய என் நண்பன்
Posted திசெம்பர் 31, 2008
on:- In: அனுபவங்கள்
- 6 Comments
என் கல்லூரிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறேன். மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டா என்று நினைவு இல்லை. அச்சமயத்தில் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதில் பளுத் தூக்கும் போட்டியும் நடக்க இருந்தது. அதில் என் நண்பன் ஒருவன் பங்கேற்க பெயர் கொடுத்திருந்தான் (அவன் ஜிம் வழக்கமாக சென்று உடம்பை நன்றாக வைத்திருப்பான்).
நான் அச்சமயம் எடை மிகவும் குறைவு. ஆகையால் என் எடை பிரிவில் போட்டியிட யாரும் இருக்க மாட்டார்கள் எனவே நான் எவ்வளவு எடை தூக்கினாலும் அப்பிரிவில் வெற்றி பெற்று விடுவேன் என்று ஒரு நண்பன் (நண்பனா அவன்) உசுப்பேத்தி விடவே நானும் அப்போட்டியில் கலந்துக் கொள்ள தயாரானேன்.
முதலில் எனது நண்பன் பளுத் தூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள ஆயத்தமானான். என்ன ஆயிற்றோ தெரிய வில்லை. அவன் சரியாக பளுத் தூக்காமல் தவறி ஏடாகூடமாக கீழே போட்டு விட்டான். அதனால் அவனது தோள்பட்டை பிசகி விட்டது. உடனே அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் அப்பொழுது.
எனவே எங்கள் நண்பர்கள் பட்டாளம் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆகையால் நான் அன்று பளு தூக்க வில்லை. அனுபவம் உள்ள அவனுக்கே அன்று அக்கதி என்றால் கற்றுக்குட்டியான என் கதி என்ன ஆகி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். எனவே தான் அவனை என்னை காப்பாற்றிய நண்பன் என்று சொன்னேன். சரிதானே? 🙂
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
கல்லூரி கலாட்டாக்கள்
Posted ஓகஸ்ட் 3, 2008
on:- In: நினைவுகள்
- 4 Comments
என் கல்லூரிக்கால கலாட்டாக்கள் சிலவற்றை பகிர்ந்துக் கொள்கிறேன்.
எனது நண்பனிற்கு லேப் வைவா-வில் கேட்கப்பட்ட கேள்வி: ”What is a protocol?“. அதற்கு அவன் சொன்ன பதில் “Its our college function“. என் நண்பன் படித்த கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் கணினித் துறை சார்பாக நடத்தப்படும் விழா பெயர்தான் “Protocol”. அதைத்தான் அப்பெருந்தகை பதிலாக கூறியுள்ளார்.
மேனேஜ்மென்ட் பற்றி எங்கள் ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தப்போது வழக்கம்போல அதை கவனிக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த அவ்வாசிரியை பாடம் நடத்துவதை நிறுத்தி என்னை எழுப்பி “Who is the decision maker?” என்று அப்போது நடத்திக்கொண்டிருந்த பாடத்திலிருந்து கேள்விக்கேட்டார். நான் என்ன சொல்வதென்றுத் தெரியாமல் சுற்றிமுற்றிப்பார்த்து பின்னர் அவரிடமே “I am not the decision maker” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன்.
அதே ஆசிரியை ஒரு நாள் நான் மறுபடி வகுப்பில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை கவனித்து (அப்போது நான் சபரி மலைக்கு மாலைப் போட்டிருந்தேன்) என்னருகில் வந்து “நீ மாலை போட்டிருப்பதே வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். என்ன கோபமோ தெரியவில்லை 🙂
4வது அல்லது 5வது செமஸ்டரா என்று சரியாகத் தெரியவில்லை. எங்களுக்கு கணித சம்பந்தப்பட்ட பாடமொன்றை எடுக்க ஒரு ஆசிரியர் வந்தார். அவர் கொஞ்சம் முசுடு. யாராவது அவரிடம் மாட்டினால் சரியாக ஓட்டிவிடுவார். இவரால் எனது நண்பர்கள் சிலர் பலதடவை நன்றாக ஓட்டப்பட்டு அவமானப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவன் அவரைப் பழிக்கு பழி வாங்கப்போவதாக சொல்லி ஒரு நாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவரைக் கேட்காமல் வகுப்பறைக்குள் நுழைந்தான் (ஆசிரியரை அவமானப்படுத்தி விட்டானாம்). அவர் அவனை நிறுத்தி “என்ன, தொறந்த வீட்டுல ஏதோ புகுந்த மாதிரி, நீப் பாட்டுக்கு உள்ள வரே” என்று கேவலமாக கேட்டு அவனை பயங்கரமாக அவமானப்படுத்தி விட்டார். பாவம் அவன். அவனை நாங்கள் இதைவைத்து இன்னுமும் ஓட்டி வருகிறோம். (அதாவது 8-9 வருடங்களாக)
இன்னொரு நண்பன் ஒருவன் அதற்கு முந்தைய நாள் கல்லூரிக்கு வரவில்லை. எனவே எங்கள் பேராசிரியை அவனை ஏன் நேற்று நீ வரவில்லை என்றுக் கேட்டார். அதற்கு அவன் என்ன சொல்வதென்றுத் தெரியாமல் “மேம். நேத்து காலேஜிற்கு வர வழியில ஆக்ஸ்டெண்ட் ஆயிடிச்சி” என்றான். அப்பேராசிரியைக்கு என்னத் தோன்றியதோ தெரியவில்லை, “ஏம்ப்பா உண்மையை சொல்லு, தேவையில்லாமல் பொய் சொல்லாதே அப்புறம் நிஜமாக அப்படி ஆயிடப்போகுது” என்றார். இவனோ “இல்லை மேம், நிஜமாத்தான்” என்று சொல்லிவிட்டான். இது நடந்து சில நாட்களுக்கு பிறகு நிஜமாகவே அவனிற்கு அவன் என்னப்பொய் சொன்னானோ அதே மாதிரி அதே இடத்தில் விபத்து நடந்துவிட்டது. பிறகு அவன் எங்களிடம் பட்டப்பாட்டை சொல்லவா வேண்டும்?
அண்மைய பின்னூட்டங்கள்