Posted by: மோகன் on: மே 3, 2008
கடந்த மாதம் சேலத்தில் (எனது சொந்த ஊர்) எனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்தப்போது, போக்குவரத்து காவலர்களால் சோதனைக்குள்ளாக்கப் பட்டேன். இருசக்கர வாகனத்தின் இன்ஷுரன்ஸ் தவிர அனைத்து ஆவணங்களையும் அப்போது வைத்திருந்தேன். இருசக்கர வாகனத்தின் இன்ஷுரன்ஸ் ஆவணம் வீட்டில் இருந்தததை காவலரிடம் சொல்ல, அவர் அதை எடுத்து வரச் சொன்னார். அதற்கு முன்பு என் வண்டியை அருகிலிருந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்து விட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய் விட்டார். தவிற ஒரு கேஸ் ஷீட் போட்டுக் கொடுத்து விட்டார்.
நான் வீட்டிலிருந்து இன்ஷூரன்ஸ் ஆவணத்தை கொண்டு வந்து காவலரிடம் காட்டியும் அவர் என்னை விட வில்லை. ஆனால் அந்த கேஸ் ஷீட்டில் ஆவணங்களை கொண்டு வந்து காட்டினால் காவலர் அதை ஏற்றுக்கொண்டு அந்த கேஸ் ஷீட்டை ரத்து செய்து விடலாம் என்று சொல்ல பட்டிருந்தது. ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை. அவர் அடுத்த நாள் என்னை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார்.
அடுத்த நாள் நான் போக்குவரத்து காவல் நிலையத்திற்குச் சென்றேன். அங்கு இருந்த காவலர், என்னை அன்று மாலை என்னை நீதிமன்றத்திற்கு வரச் சொல்லி விட்டார். என் விதியை நொந்துக்கொண்டே அன்று மாலை நீதிமன்றத்திற்கு சென்றேன்.
நீதிமன்ற வளாகத்தில், அறை எண் 3க்கு அங்கிருந்த வழக்கறிஞரிடம் வழி கேட்டேன். அவர் வழி சொல்லாமல், என்ன கேஸ் என்றுக் கேட்டார். நான் என்ன பிரச்சினை என்று சொன்னவுடன் அவர் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளுங்கள், அபராதத்தை குறைத்துக் கொள்ளலாம், இல்லயென்றால் அபராதம் அதிகமாக இருக்கும். எப்படி, வழக்கறிஞர் வைத்துக் கொண்டால் 300 ரூபாய் அபராதம் மற்றும் 250 ரூபாய் வழக்கறிஞருக்கு. இதைத்தான் சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்று சொல்வார்களோ? அவரிடம் ஒரு வழியாக தப்பித்து, அறை எண் 3க்கு சென்று அங்கிருந்த அரசு ஊழியரிடம் சென்று என் பிரச்சினையை கூறி அவரிடம் உதவி கேட்டேன்.
அவர் இதற்கு வழக்கறிஞர் தேவையில்லை, நீதிபதி மாலை 6 மணிக்கு சரியாக வருவார்கள், அப்போது வந்தால் போதும் என்று சொன்னார். நேரம் நிறைய இருந்ததால் நான் நீதிமன்ற வளாகத்திலியே சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு ஆள் வந்து என்ன பிரச்சினை என்று மறுபடி கேட்க, மறுபடி பிரச்சினையை சொல்ல அவர் மறுபடி வழக்கறிஞர் பற்றி பேசினார். நான் வழக்கறிஞர் தேவையில்லை என்று சொல்ல, அவர் வழக்கறிஞர் இல்லையென்றால் உங்களுக்கு அபராதம் 2000 ரூபாய் விதிப்பார்கள் என்று என்னை பயமுறுத்தினார் (????)
நான் பரவாயில்லை, 2000 ரூபாய் அபராதம் கட்டிக் கொள்கிறேன் என்று சொல்லி விட அவர் பயங்கர கடுப்புடன் போய்விட்டார்.
பிறகு நீதிபதி வந்த பின்னர், ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். எனது முறை வந்தவுடன், நீதிபதி எனக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தார். அந்த அபராதத்தை நான் செலுத்தி விட்டு வந்தேன்.
இந்த சின்ன பிரச்சனைக்கே சிலர் இப்படி பயமுறுத்தினால், பெரிய பிரச்சனைகளுக்கு என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தேன். ஒன்றுமே தெரியாதவர்கள் நீதிமன்றத்திற்கு போனால் என்ன நடக்கும் என்றும் யோசித்துப் பார்த்தேன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
உண்மை உண்மை
மே 5, 2008 இல் 1:33 மு.பகல்
ஒன்றுமே தெரியாதவர்கள் நீதி மன்றத்துக்குப் போனால் நீதியும் கிடைக்காது இருக்கும் பணம் ,வாழ்க்கை, எல்லாம் போய் விடும். வழக்கறிஞர் கண்டுக்கவேமாட்டர் உன் பணத்தைத்தவிர வேறு எதையும்.